தீண்டத்தகாதவர்கள் எப்படி நடத்தப்படுகின்றனர்?

தீண்டத்தகாதவர்கள் எப்படி நடத்தப்படுகின்றனர்?


1. அன்றைய மராத்திய பேஷ்வாக்களின் ஆட்சியில், ஒரு தெருவில் எதிரில் வரும் இந்துவின் மீது தீண்டத்தகாதோரின் நிழல் பட்டால்கூட தீட்டாகிவிடும் என்ற காரணம் காட்டி - தீண்டத்தகாதவர்களை தெருவுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இந்துக்கள் தவறி தீண்டத்தகாதவர்களைத் தொட்டு அவர்கள் தீட்டாகி விடுவதைத் தடுக்க, தீண்டத்தகாதவர் தன் கழுத்திலோ மணிக்கட்டிலோ கறுப்புக் கயிறு ஒன்றை அடையாளமாகக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

2. பேஷ்வாவின் தலைநகரான பூனாவில் தீண்டத்தகாதவர், தன்னுடைய இடுப்பில் துடைப்பம் ஒன்றைக் கட்டிக் கொண்டு, தான் போகும் பாதையில் - தன் காலடித் தடத்தின் புழுதியைப் பின்புறமாகக் கூட்டியபடி சென்றாக வேண்டும் என்ற ஆணை இருந்தது. இல்லாவிட்டால், அதே தெருவில் நடக்கும் இந்து தீட்டாகி விடுவானாம்.

3. பூனாவில் தீண்டத்தகாதவர் எங்கு போனாலும் தன் கழுத்தில் மண்கலயம் ஒன்றைத் தொங்கவிட்டுக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆணையும் இருந்தது. அவன் தன் எச்சிலை அந்தக் கலயத்தில் துப்பிக் கொள்ள வேண்டும். ஏன் அப்படி என்றால், தீண்டத்தகாதவரின் எச்சில் தரையில் விழுந்தால் - அதைத் தெரியாமல் மிதித்து விடும் இந்து தீட்டாகி விடுவானாம்!

மிக சமீப காலத்து நிகழ்ச்சிகளைக் கூட பார்ப்போமே:

மத்திய இந்தியாவைச் சேர்ந்த ‘பலாய்' என்கிற தீண்டத்தகாத சமூகத்துக்கு, இந்துக்கள் இழைத்த கொடுமைகள் என் கருத்துக்குச் சான்றாகும். 1928 சனவரி 24 அன்று, ‘டைம்ஸ் ஆப் இந்தியா'வில் இதுபற்றிய செய்தி வெளியாகி உள்ளது. இந்தூர் மாவட்டத்தில் உள்ள கனாரியா, பிச்சோலி - ஹப்சி, பிச்சோலி மர்தானா முதலிய 15 கிராமங்களில் இருந்த கலோதர்கள், ராஜபுத்திரர்கள், பார்ப்பனர்கள் முதலிய மேல்சாதி இந்துக்கள் - பட்டேல்கள், பட்வாரி உள்ளிட்டோர் - தத்தம் கிராமத்தைச் சேர்ந்த ‘பலாய்' இனத்தாரிடம், ‘பலாய்'கள் அந்த கிராமங்களில் வாழ வேண்டும் என்றால், மேல்சாதி இந்துக்கள் இட்ட சில விதிமுறைகளை ஏற்று நடக்க வேண்டும் என்று அறிவித்தனர். அந்த விதிமுறைகள் என்ன? நீங்கள் எங்களிடையே வாழ விரும்பினால்

1. தங்க சரிகைக் கரை போட்ட உடைகள் அணியக் கூடாது.2. புதுமையான / வண்ணக் கரைபோட்ட உடைகளை அணியக் கூடாது. இந்து ஒருவன் இறந்து போனால், இறந்து போன இந்துவின் சொந்தக்காரர்களுக்கு - அவர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் - இழவுச் செய்தியைப் போய் சொல்ல வேண்டும்.3. எல்லா இந்து திருமணங்களிலும் ஊர்வலத்தின் போதும் திருமணம் நடக்கும் போதும், பலாய்கள் மேள தாளங்களை இசைக்க வேண்டும்.4. பலாய்ப் பெண்கள் தங்க, வெள்ளி நகைகளை அணியக் கூடாது. நவீன ஆடைகளையோ, ரவிக்கைகளையோ அணியக் கூடாது.5. இந்து பெண்களுக்கு பலாய்ப் பெண்கள்தான் பிரசவம் பார்க்க வேண்டும்.6. எந்தவித கூலியும் கேட்காமல், பலாய் மக்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும். ஓர் இந்து மனமுவந்து தருவதை, பேசாமல் வாங்கிக் கொள்ள வேண்டும்.7. இந்த விதிமுறைகளை ஏற்று நடக்க பலாய்கள் சம்மதிக்கா விட்டால், அவர்கள் கிராமங்களை விட்டு வெளியேற்றப்படுவர்.

‘பலாய்'கள் இந்தச் சட்டங்கøள ஏற்க மறுத்தார்கள். உடனே இந்துக்கள் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கிராமத்துக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க ‘பலாய்'கள் அனுமதிக்கப்படவில்லை. தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல அனுமதிக்கவில்லை. ஓர் இந்துவினுடைய நிலத்தைக் கடந்து செல்ல ஒரு பலாய்க்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஒரு பலாயினுடைய நிலம், இந்துக்களுக்குச் சொந்தமான நிலங்களுக்கு நடுவில் இருந்தால், அந்த நிலங்களின் வழியே தன்னுடைய நிலத்துக்கே அவர் செல்ல முடியாது. ‘பலாய்'களின் வயல்களில் உள்ள பயிர்களை, இந்துக்கள் தங்கள் கால்நடைகளை விட்டு அழிக்க விட்டனர். இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராக, ‘பலாய்'கள் அரசவைக்கு மனுக்கள் அனுப்பினர்.

ஆனால், உரிய நேரத்தில் தக்க நிவாரணம் ஏதும் ‘பலாய்'களுக்குக் கிடைக்கவில்லை. அடக்குமுறைகள் தொடர்ந்ததால் சொந்த மண்ணை விட்டு - வீடு வாசலை விட்டு தங்கள் பெண்டு பிள்ளைகளோடு பிழைப்பு தேடி - தார், தேவாஸ், பக்ளி, போபால், குவாலியர் போன்ற அண்டைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டி வந்தது. புதிய இடங்களில் அவர்களுக்கு என்ன ஆயிற்று என்பது வேறு கதை.

Comments