நல்லதையே விதைக்க வேண்டுமே

நல்லதையே விதைக்க வேண்டுமே


மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்;  மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். - (கலாத்தியர் 6:7).

ஒரு வயதான கிறிஸ்தவ தொழிலதிபர், தனக்கு வயதாகி கொண்டிருந்தபடியால், மற்றும் அவருக்கு பிள்ளைகள் இல்லாதிருந்தபடியால், தனக்கு பிறகு யாரை தனது கம்பெனியின் மேலதிகாரியாக வைப்பது என்று யோசித்து கொண்டிருந்தார். தனது அலுவலகத்தில் வேலை செய்பவர் யாவருமே நல்லவர்களாகவும், தேர்ந்தவர்களாகவும் தோன்றினர். ஆகையால் ஒரு சோதனை செய்து பார்ப்போம் என்று முடிவுக்கு வந்தார்.

அதன்படி, அவரது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருநத இள ஊழியர்களை அழைத்து, 'எனக்கு வயதாகி கொண்டிருப்பதால், நான் உங்களில் யாரையாவது இந்த கம்பெனியின் அதிகாரியாக வைப்பது என்று யோசித்து கொண்டிருக்கிறேன். அவரை நான் தெரிந்து கொள்வதற்கு முன், உங்களுக்கு ஒரு விதையை தருகிறேன். அது மிகவும் விசேஷித்த விதையாகும். அதை நீங்கள் விதைத்து, ஒரு வருடம் கழித்து நீங்கள், இந்த விதையின் மூலம் என்ன விளைச்சலை கண்டீர்களோ, அதை எனக்கு கொண்டு வந்து காட்டவேண்டும்' என்று கூறி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதையை கொடுத்தார்.

அதில் ஜிம் என்கிற வாலிபன் தன் மனைவியிடம் அந்த விதையை காண்பித்து, நடந்தவற்றை சொன்னான். அதை கேட்ட அவனது மனைவி கொடுத்த ஒரு மண் பாத்திரத்தில் அந்த விதையை விதைத்து, தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தான். மூன்று வாரங்களில் அவனோடு கூட வேலை செய்து கொண்டிருந்த விதைகளை பெற்ற மற்றவர்கள் தங்கள் விதை செடியாக வளர்ந்து வருவதை குறித்து பேச ஆரம்பித்தார்கள். ஜிம் தன்னுடைய செடியை பார்க்க போனால் அதிலிருந்து ஒன்றும் வளரவே இல்லை. ஆறுமாதங்கள் கழிந்தன, இன்னும் ஜிம்மின் விதையிலிருந்து ஒன்றுமே வளரவில்லை. அவனும் எருபோட்டு, தண்ணீர் விட்டு, பார்த்தான். ஆனால் ஒன்றுமே பயனில்லை. மற்றவர்களோ தங்கள் செடியை பற்றி மிகவும் பெரிதாக பேசி கொண்டிருந்தார்கள். ஜிம்மோ ஒன்றுமே பேசவில்லை.

ஒரு வருடம் கழிந்தது. ஜிம்மின் விதை போட்டபடியே இருந்தது. அதை எடுத்து கொண்டு போக அவன் வெட்கப்பட்டான். அவனது மனைவியோ, 'இல்லை நீங்கள் இதை கொண்டு போங்கள், எதை விதைத்தோமோ அது தானே வந்திருக்கிறது' என்று கூறினாள். சரி என்று அடுத்த நாள் ஜிம் அலுவலகத்திற்கு கொண்டு போனான். மற்றவர்களும் தங்கள் செடியை கொண்டு வந்திருந்தார்கள். அவர்களது செடி விதவிதமாய் அழகாய் வளர்ந்து, சிலரது பூக்கூட பூத்திருந்தது. அவர்கள் ஜிம்மின் பானையை பார்த்து சிரித்தார்கள்.

கடைசியில் பெரியவர் வந்தார். எல்லாருடைய செடியையும் பார்த்து பாராட்டினார். ஜிம் கடைசியில் பயத்தோடு அமர்ந்திருப்பதை கண்ட பெரியவர், அவனது மண்பாண்டத்தையும் கண்டார். அவனை மேலே தன்னிடம் வர சொன்னார். அதை கேட்டவுடன், ஜிம் ஆடிப்போய் தன்னை வேலையிலிருந்து எடுக்க போகிறார் என்று பயத்துடன் மேலே போனான். எல்லாரையும் அமரசெய்து விட்டு, ஜிம்மை நோக்கி 'இவர்தான் அடுத்த மேலதிகாரி' என்று அறிவித்தார். எல்லாரும் முறுமுறுக்க ஆரம்பித்தார்கள். அவனது செடியில் ஒன்றுமே இல்லையே பின் எப்படி அவன் வரலாம் என்று. அப்போது பெரியவர் மற்றவர்களை அமைதலாய் இருக்க சொல்லி, கூற ஆரம்பித்தார்: 'நான் ஒரு வருடத்திற்கு முன் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதையை கொடுத்து அதை நட்டு, ஒரு வருடம கழித்து கொண்டு வர சொன்னேன். நான் கொடுத்த எல்லா விதையுமே செத்த விதைகள். அவைகளை நட்டால் ஒன்றுமே வராது. நீங்கள் எல்லாரும், ஒன்றும் வளராததை பார்த்து, வேறொரு விதையை விதைத்து, வளர செய்தீர்கள். ஆனால் ஜிம்மோ, நான் எப்படி கொடுத்தேனோ அதை அப்படியே விதைத்து, அது வளரவில்லை என்றாலும், அதை தைரியமாக உண்மையாக கொண்டு வந்ததை நான் பாராட்டுகிறேன். நான் வைத்த சோதனையில் நீங்கள் யாவரும் தோற்று போய் விட்டீர்கள். ஜிம் மாத்திரம் உண்மையாய் இருந்தபடியால், அவனே அடுத்த மேலதிகாரி' என்று அறிவித்தார். மற்றவர்கள் வெட்கத்துடன் தலை கவிழ்ந்தனர்.  மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் என்று வேதம் நமக்கு தெளிவாக போதிக்கிறது. 'தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்' - (கலாத்தியர் 6:8-9).

நாம் உண்மையை விதைத்தால் நல்நம்பிக்கையை அறுப்போம்.  நாம் தாழ்மையை விதைத்தால் உயர்வை அறுப்போம்.  நாம் மற்றவர்களிடம் தயவை விதைத்தால் நல்ல நண்பர்களை பெறுவோம்.  நாம் உழைப்பை விதைத்தால் வெற்றியை அறுப்போம்.  நாம் மன்னிப்பை விதைத்தால் ஒற்றுமையை அறுப்போம்.  நாம் கிறிஸ்துவிடம் விசுவாசத்தை விதைத்தால் நித்திய ஜீவனை அறுப்போம்.  நாம் கர்த்தருடைய வசனத்தை விதைத்தால் ஆத்துமாக்களை அறுவடை செய்வோம். நாம் பொய்யை விதைத்தால் தீமையையே அறுப்போம்.  ஆகையால் நாம் எதை விதைக்கிறோம் என்பதில் கவனமாயிருப்போம், ஏனெனில் எதை விதைக்கிறோமோ அதையே நிச்சயமாய் அறுப்போம்.


Comments