இந்தப் புரட்சிக்கு யார் காரணம்...?

"இது   வெற்றியா ....தோல்வியா ....?
---------------------------------------------------------
தெரியவில்லை....!
-------------------------------
ஆனால் ... இது புரட்சி....!"
---------------------------------------

இந்தப் புரட்சிக்கு  யார் காரணம்...?

தமிழகத்தைத்  தட்டி எழுப்பிய ஜல்லிக்கட்டுப்  போராட்டத்தின் மையப் புள்ளியாக 136 பேர் இருந்தது  இப்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி உள்ளது.

சென்னை மெரீனாவை ஒருங்கிணைத்த...  12 குழுக்களாகப்  பிரிந்து செயல்பட்ட ...  136  ஆர்வலர்களின்  ஆர்வமும் பங்களிப்பும்...  இந்த  அமைதியான புரட்சிக்கு அழகாக  அடித்தளமிட்டன .

தமிழ்நாட்டின் பாரம்பரியக்  கலாச்சாரத்தைக்  கட்டிக்காக்க நேற்று மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் பொது மக்களும், இளைஞர்களும் கிளர்ந்தெழுந்தனர்.

சுமார் 30 லட்சம் பேர் நேற்றையப் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

சென்னையில் நேற்று மெரீனா கடற்கரையில் சுமார் 12 லட்சம் பேர் திரண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர்.

தமிழ்நாடு இதுவரை கண்டிராத புதிய புரட்சியாகவே  இது  இன்றும் கருதப்படுகிறது.

பந்தா காட்டும் அரசியல்வாதிகளோ, மாய மயக்கம் ஏற்படுத்தும் சினிமா நடிகர், நடிகைகளோ இல்லாமல் முழுக்க - முழுக்க..., பொதுமக்களின் தன்னெழுச்சியாகவே  இந்த அறப்போர் நடந்து... இப்போது  "முடிந்து"  இருக்கிறது....!.

ஒவ்வொரு தமிழனும் தன் இனப் பாரம்பரியத்தைப்  பாதுகாக்க யாரும் சொல்லாமலே, தானாக முன் வந்து, அனைவரும்  தங்களைப்  போராட்டக்  களத்தில் இணைத்துக் கொண்ட உரிமைப் போர் இது....! .

சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து இந்த புரட்சி நிகழ்த்தப்பட்டுள்ளது.

எந்த ஒரு தொடக்கத்துக்கும் நிச்சயம் ஒரு மையப்புள்ளி இருக்கும்.

அந்த மையப் புள்ளியில் இருந்து கிளம்பும் சிறு தீப்பொறிதான் பிறகு கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீயாக மாறும்.

இளைஞர்கள் போராட்டத்துக்கும் அந்த மையப்புள்ளி உள்ளது.

அதை கண்டுபிடிக்க கடந்த 4 நாட்களாக உளவுத்  துறை படாத பாடுபட்டது.

ஆனால் அவர்களால் அந்த மையப் புள்ளியை நெருங்கக் கூட இயலவில்லை.

உண்மையில் தமிழகத்தைத்  தட்டி எழுப்பிய அந்த மையப் புள்ளியாக 136 பேர் இருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி உள்ளது.

யார் இந்த 136 பேர்? என்று தெரிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் ஆர்வம் ஏற்படலாம்.

இந்த 136 பேரும் ஒரு கை ஓசையாகச்  செயல்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விவேகானந்தர் 100 இளைஞர்களை ஒட்டு மொத்தமாகத் தேடினார்....!

இவர்களோ.... 136 பேர்கள்....!

இவர்களை ஜல்லிக்கட்டு  ஒன்று சேர்க்கவில்லை.

 கடந்த 2015-ம் ஆண்டு சென்னையைப்  புரட்டிப் போட்ட வெள்ளம்தான் அப்போதே ஒன்று சேர்த்திருந்தது.

சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கித்  தவித்த போது,  இணையத்தளத்தில் இவர்கள் 136 பேரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனார்கள்.

வெள்ளப் பாதிப்புகளில் இருந்து சென்னை மக்களைக்  காப்பாற்ற இந்த 136 பேரும் "பேஸ்புக்" மற்றும் "வாட்ஸ்அப்"  வாயிலாக,  ஒரு பெரிய சமூக  வட்டத்தையே  ஏற்படுத்தினார்கள்.

அந்த வட்டம்தான் சென்னையில் வெள்ளச் சீற்றம் ஏற்பட்டபோது அனைத்து  இளைஞர்களையும் அணைத்து ,  வீறு கொண்டு எழச் செய்தது.

மாநில அரசு உதவிக்கு வரும் முன்பே  இந்த  இளைஞர்கள் , களத்தில் நின்று,  பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரைத்  துடைத்து விட்டனர்.

அப்போதே தமிழக இளைஞர்களின் எழுச்சியை மத்திய - மாநில அரசுகள் சற்று மிரட்சியுடன்தான் பார்த்தன.

அந்த 136 ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்ட இளைஞர்கள்தான் தற்போதைய ஜல்லிக்கட்டுப்  போராட்டத்துக்கும் வித்திட்டனர்.

ஜல்லிக்கட்டுப்  போட்டிக்கு உள்ள தடையை உடைத்தால்தான்,  தமிழர்களின் பாரம்பரியக்  கலாசாரத்தைக்  காப்பாற்ற முடியம் என்ற யதார்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர்.

எனவே,  இந்த 136 ஒருங்கிணைப்பாளர்களும் தங்கள் குழுக்கள் மூலம் மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

முதலில் 20 பேர் வந்தனர்.

இது 200 ஆக மாறியது.

பிறகு 2 ஆயிரமானது.

அன்று மதியமே அந்த குழுக்களில் உள்ள 2 ஆயிரம் பேர் கடற்கரைக்கு வந்து விட்டனர்.

இந்த 2 ஆயிரம் பேரையும் எளிதில் சமாளித்து அனுப்பி விடலாம் என்றே போலீசார் நினைத்தனர்.

ஆனால் அந்த 2 ஆயிரம் பேரின் வாட்ஸ்அப் மற்றும்  பேஸ்புக்குகளில் இருந்து பரவிய போராட்ட அழைப்புகள் அணி, அணியாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களையும், மாணவர்களையும் மெரீனாவுக்கு அழைத்து வந்து விட்டன .

அதைப்  பார்த்த பிறகே, " எப்படி வந்தனர்? எங்கு இருந்து வந்து இப்படி குவிந்தனர்?", என்று போலீசார் திணறிப் போனார்கள்.

ஆனால் 136 ஒருங்கிணைப்பாளர்கள் திணறவில்லை.

தங்கள் போராட்டத்தைக்  கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் முன்னெடுத்துச்  செல்ல மிக, மிக நேர்த்தியாகத்  திட்டமிட்டனர்.

போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த,  இந்த 136 ஒருங்கிணைப்பாளர்களும் 12 குழுக்களாகப் பிரிந்தனர்.

இந்த 12 குழுக்களில் ஒவ்வொரு குழுவிலும் சுமார் 200 பேர் இருந்தனர் .

ஆக 12 குழுக்களிலும் சுமார் 2400 தன்னார்வத் தொண்டர்கள்  இருந்தனர் .

இவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன செய்ய வேண்டும் என்று பொறுப்புகளைப்  பகிர்ந்து கொண்டனர்.

இவர்கள்தான் தினமும் மெரீனா கடற்கரையில் நடக்கும் அறப்போராட்டத்தை மிகத் தெளிவாக, துணிவாக நடத்தி  வந்தனர் .

2400 தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட இந்த 12 குழுக்களும் உணவு, சுகாதாரம், துப்புரவு, பிரசாரம், தண்ணீர் சப்ளை, மருத்துவம், போக்குவரத்து போன்ற 12 முக்கியத்  தேவைகளை நிறைவேற்றும் தனித்தனிப் பிரிவுகளாகச்  செயல்பட்டன .

(அரசாங்க மொழியில் சொன்னால்... : 12 வாரியங்களாக...!)

இந்த 12 குழுக்களுக்கும் தனித்தனி "வாட்ஸ்அப் குழு" உருவாக்கப்பட்டிருந்தது .

அந்தந்த குழு உறுப்பினர்கள் அந்த "வாட்ஸ்அப் தகவல்கள்" அடிப்படையில் தங்கள் பணிகளைச்  செய்து முடித்தார்கள் .

இதனால்தான் மெரீனா கடற்கரைப்  போராட்டக்  களம் ராணுவ அமைப்பு போல, கட்டுப்பாடுடன், கட்டுக்கோப்பாக அமைந்தது .

போராட்டக்  களத்தில் எந்த சிறு சலசலப்பும், சர்ச்சையும் ஏற்படாததற்கு இந்த 12 குழுக்களின் சிறப்பான ஒருங்கிணைப்பே அடித்தளமாக இருந்தது .

அது மட்டுமின்றி போராட்டத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும்  இந்த 12 குழுக்கள் தினமும் பேசி முடிவு எடுத்தார்கள்.

மேலும் 136 ஒருங்கிணைப்பாளர்களும் தினமும் தவறாமல் ஆலோசனை நடத்தினார்கள் .

அப்போது நிறை-குறைகளை விரிவாக விவாதித்தார்கள்.

அந்த விவாதத்துக்குப் பிறகு ஏகமனதாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டுப்  போராட்டக்  களத்துக்குள் அரசியல்வாதிகளையும், சினிமாக்காரர்களையும் அனுமதிக்க கூடாது என்ற முடிவை 136 ஒருங்கிணைப்பாளர்களும் இப்படித்தான் எடுத்தனர்.

மெரீனாப்  போராட்டத்தை வெற்றிப்  பாதையில் கொண்டுசென்ற  இந்த  136 ஒருங்கிணைப்பாளர்களில் பெண்கள், கல்லூரி மாணவிகளும் இருந்தனர் .

ஐ.டி. நிறு வனங்களில் பணிபுரிபவர்களும் கணிசமாக இருந்தனர் .

 அவர்களது பணி நேரம் பாதிக்காதபடி, போராட்டப்  பணிகளை  அவர்களுக்கு வழங்கி  வந்தார்கள் .

இந்த ஒழுங்கு முறையான  ஒருங்கிணைப்பு தான்  , போராட்டம் எழுச்சியாக மாற உதவியது.

17 மற்றும் 18-ஆம் தேதிகளில் இளைஞர்களும் மாணவர்களும் தன்னந்தனியாகப்  போராடும் நிலையில்தான் இருந்தனர்.

ஆனால் உணவு, தண்ணீர் போன்றவற்றைத்  தாராளமாக தரும் வகையில் நன்கொடையாளர்கள் வரத் தொடங்கியதும், 136 ஒருங்கிணைப்பாளர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

நமது  இனத்துக்காக... நமது கலாச்சாரத்துக்காக... நமது வீட்டுக்  கண்மணிகள் ,  கடற்கரையில் கடும் குளிரிலும், பனியிலும் தூங்கி எழுந்து போராட்டம் நடத்துகிறார்களே.... அவர்களுக்கு சோறு கொடுப்போம், தண்ணீர் கொடுப்போம், பிஸ்கட் கொடுப்போம் என்று நிறைய தமிழ் உணர்வாளர்கள் முன் வந்தனர்.

போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்  செல்ல இது வலுவூட்டத்தை  ஏ ற்படுத்தித் தந்தது.

அதன் பிறகு,  மாணவர்களும் , பொதுமக்களும்  சாரை, சாரையாக மெரீனா கடற்கரைக்கு வரத் தொடங்கியதும், 136 ஒருங்கிணைப்பாளர்களும் போராட்டக்களத்தைக்  கட்டுக்கோப்பான பாதைக்கு அழைத்துச்  சென்றனர்.

மாணவர்களின் போராட்டத்தில் நெகிழ்ந்த சிலர் ஒன்று சேர்ந்து,  1300 போர்வைகளை  வாங்கிக் கொடுத்தனர்.

சில பிரபலமான உணவகங்கள் தாமாக முன் வந்து உணவு பொட்டலங்கள் கொடுத்தன.

கோயம்பேட்டைச் சேர்ந்த வியாபாரிகள் அனைவரும் பழ வகைகளை அள்ளி, அள்ளிக் கொடுத்தனர்.

சில தனியார் அமைப்புகள்   பிரியாணிகள்  கூட  தயாரித்து வழங்கின.

இதிலும் சில அமைப்புகள் குளிர்காய   நினைத்தன.

ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகச்  செயல்பட முயன்றன.

பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும்  குறி வைத்து விமர்சனம் செய்யவும்  தொடங்கின.

இது போராட்டக்  களத்தைத்  திசை திருப்பி விடுமோ என்ற அச்சம் கூட அப்போது  ஏற்பட்டது.

ஆனால் 136 ஒருங்கிணைப்பாளர்களும் மிக, மிக நேர்த்தியாகச்  செயல்பட்டு, அத்தகைய சேவை அமைப்புகளைத்  தவிர்த்தனர்.... புறக்கணித்தனர்.


இதனால்,  மெரீனா போராட்டக்களம்  அந்த நேரத்தில் "அதிர்ஷ்டவசமாகத்"  தப்பித்துக் கொண்டது....!

தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் இலக்குடன் மிகச்சரியான பாதையில் தொடர்ந்து  சென்றது.

அதன் பிறகே இளம் பெண்களும், பொதுமக்களும் புதியதோர்  உத்வேகத்துடன் புற்றீசல் போலப்  புறப்பட்டு வந்து, மெரீனா கடற்கரையை நிறைத்து விட்டனர்.

அவர்கள் மட்டுமல்ல...,  துப்புரவுத்  தொழிலாளர்கள் கூட எந்த பிரதிபலனும் பாராமல் மெரீனா போராட்டக்  களத்தில்,  உணர்வு பூர்வமாக,   ஒத்துழைப்பு கொடுத்தனர்.

இந்த உண்மைதான் ஜல்லிக்கட்டுப்  போராட்டத்தை உன்னதமாக மாற்றியது.

136 ஒருங்கிணைப்பாளர்கள்   போராட்டத்தைத் தொய்வின்றி  நடத்தினார்கள்.

12 குழுக்கள் அந்தப்  போராட்டத்தைக்  கட்டுப்பாடுடன் இயங்க வைத்தன.

ஏனைய மாணவர்களும், பொதுமக்களும் அதை வெற்றிக்  கிரீடமாக மாற்றி விட்டனர்.

ஆனால்....

ஆனால்....

அதன்பிறகு   நடந்த  சூழ்ச்சிகளும் மோசடிகளும் தாம்...... உங்களுக்கே தெரியுமே....!

எனவே,

என் அன்பிற்கினியவர்களே....!

இது... நமது ...

வெற்றியும்  அல்ல....!

தோல்வியும்....அல்ல...!

பாடம்....!

ஆம்....!

"எதிரிகள்  தொலைவில் இருப்பார்கள்....! நண்பர்களும்  துரோகிகளும் நம்முடனேயே இருப்பார்கள்....!"

Comments