காளைகளுக்கு உணர்ச்சி மாத்திரை

காளைகளுக்கு உணர்ச்சி மாத்திரை, பாலிதீன் பேப்பரில் செய்யப்பட்ட யோனியில் விந்து சேகரிப்பு! விலங்கு நலவாரியத்தின் ஆசீர்வாதம்!

- நாளை காலை பள்ளிக்கரணைக்கு வாருங்கள்
ம.செந்தமிழன்

இந்திய விலங்கு நல வாரியம் (AWBI), காளைகளையும் பசுக்களையும் பாதுகாப்பதாகக் கூறித்தான் நமது மரபு உரிமைகளைப் பறிக்கிறது. அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜெர்சி, பிரீசியன் போன்ற காளைமாடுகளை இந்திய அரசு நடத்தும் முறையைக் கொஞ்சம் அறிந்துகொள்ளுங்கள்.

சீமைக் காளை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர், அவை பசுக்களோடு உடலுறவு கொள்வதைத் தடுக்கிறார்கள். காளைகளைத் தனியாக அடைத்து, ஆண் குறி விரைப்பதற்கான மாத்திரைகள் அவற்றின் வாய்க்குள் திணிக்கப்படுகின்றன. இரு பாலிதீன் பைகளை ஒன்றினுள் ஒன்று செருகி ஆணுறை போலத் தயாரிக்கிறார்கள். அந்த பாலிதீன் பைகளுக்கு இடையில், இளம் சூட்டில் உள்ள வெந்நீரை ஊற்றுகிறார்கள். பசுமாட்டின் பிறப்புறுப்பு போன்ற தோற்றத்தை உருவாக்கும் ‘நவீன நுட்பம்’ இது. பிறப்புறுப்பிற்குள் இருக்கும் வெது வெதுப்பான சூழலைச் செயற்கையாக உருவாக்குவதற்காகத்தான், வெந்நீர் ஊற்றப்படுகிறது.
மாத்திரைகளால், செயற்கையாக ஆண் குறி விரைத்து, உணர்ச்சியால் உந்தப்படும் காளை அந்த பாலிதீன் பைக்குள் ஆண்குறையைச் செலுத்தி இயங்கும். சிறிது நேரத்தில் விந்து வெளியேறும். அதைச் சேகரித்து, உறைவிந்து பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புகிறார்கள்.

நம் தமிழகத்தில் தஞ்சாவூர் அருகே உள்ள ஈச்சங்கோட்டையில் உள்ள கால்நடை மையத்தில் கூட இதுதான் நடக்கிறது.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள இந்திய அரசின் ’விலங்கு தனிமைப்படுத்தல் சோதனை மற்றும் சான்றிதழ் துறை’யில் (ANIMAL QUARENTINE AND CERTIFICATION SERVICES) இவ்வாறான அயல்நாட்டுக் காளைகள் பராமரிக்கப்படுகின்றன.

இந்திய விலங்கு நல வாரியம் (AWBI) இவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்தப்படும் அயல் நாட்டுக் காளைகளைப் பாதுகாக்கிறதா என்ன? இல்லை. அவர்களைப் பொறுத்தவரை, காளையும் பசுவும் உடலுறவு கொண்டால் – சித்ரவதை. காளைகளுக்கு மாத்திரை கொடுத்து பாலிதீன் பைக்குள் ஆண்குறியைச் செலுத்தினால் புண்ணியம். பசுக்கள் காளைகளோடு இணை சேர்ந்தால் பாரத தேஸத்தின் ஆசாரத்துக்குக் கேடு. பசுக்களின் யோனியில் விந்து ஊசியைக் குத்தினால், கோமாதாவுக்குச் செய்யும் சேவை.

பணம், அதிகாரம் போன்ற சுயநலவெறிகளுக்கு ஆட்பட்டு காளைகளையும் பசுக்களையும் இவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்தும் இந்திய விலங்கு நல வாரியம்,  அதன் இணை துணை அமைப்புகளை எதிர்ப்பதுதான் தமிழர்களின் அறம்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள இந்திய அரசின் ’விலங்கு தனிமைப்படுத்தல் சோதனை மற்றும் சான்றிதழ் துறை’யில் (ANIMAL QUARENTINE AND CERTIFICATION SERVICES) அமைப்பில் இப்போதும் டென்மார்க்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காளைகள் உள்ளன.
நாளை காலை, 10 மணிக்கு அந்த அலுவலகத்தின் வாசலில் கூட உள்ளோம்.

 நமது காளைகளையும், அங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ள காளைகளையும் பாதுகாப்போம்.

பசுவதை தவறு, மாட்டுக் கறி பாவம் என்றெல்லாம் பொய் பேசிப் பிழைக்கும் இந்திய விலங்கு நல வாரியத்தின் அட்டூழியங்களைப் பரப்புங்கள்.

பள்ளிக்கரணை அருகே உள்ள காமாட்சி மருத்துவமனை அருகே நாளை காலை பத்து மணிக்கு வாருங்கள்.

Comments