புத்தரும் பாண்டு ரங்கன் எனும் ஸ்ரீரங்கனும் மற்றும் ஐந்து தலை நாகமும்.
புத்தருக்கு ஆயிரம் பேர்களைச் சூட்டி மக்கள் வணங்கிவந்தார்கள். ஆயிரத்தில் ஓர் பெயர் பாண்டுரங்கன். இதைப் பற்றி அண்ணல் அம்பேத்கர் 1954 ஆம் ஆண்டு, டிசம்பர் 25 ஆம் தேதி அன்று, புனா அருகேயுள்ள தேஹூ சாலையில் புதிதாகக்கட்டப்பட்ட புத்த விகாரின், புத்தர் சிலையை திறந்துவைத்து உரையாற்றுகையில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது: "பாண்டு ரங்கனின் பெயர் புண்டாலிக் என்பதிலிருந்துதான் வந்தது. புண்டாலிக் என்றால் தாமரை. தாமரை என்பது பாலி மொழியில் 'பாண்டுரங்' என்று அழைக்கப்படுகிறது. ஆக, பாண்டுரங்கன் புத்தரேயன்றி வேறு யாருமல்ல." எனவே, பாண்டுரங்கன் என்பதுவும் பிறகு ஸ்ரீரங்கன் எனப்பட்டதும் புத்தரின் பெயர்தான் என்பதே உண்மை. மேலும், பாண்டுரங்கன் பெயரிலான திரிபாண்டுரங்கமே, பார்ப்பனியக் கும்பலால் கைப்பற்றப்பட்டு, திரிக்கப்பட்டு, ஸ்ரீரங்கமாக ஆக்கப்பட்டது. திரிக்குறள் திருக்குறளாக ஆக்கப்பட்டதைப் போல, திரிரங்கம் தமிழில் 'திருவரங்கம்' என்றும் சமஸ்கிருதத்தில் 'ஸ்ரீரங்கம்' என்றும் ஆக்கப்பட்டது.
பாண்டுரங்கன் நாகத்தின் மீது படுத்திருப்பது போன்ற சிலை உண்டு. அது புத்தரின் சிலைதான் என்பதை நாமறிவோம். அப்படியானால், ஏன் புத்தர் நாகத்தின் மீது படுத்த நிலையில் காட்டப்படுகிறார் எனும் கேள்வி எழும். அந்தக் கேள்விக்கான பதில் பஞ்ச சீலமே ஆகும்.
ஐந்து தலை நாகம் என்பது ஐந்து தீய குணங்களைக் குறிக்கிறது. கொலைவெறி, களவு வெறி, காமவெறி, பொய்யுரைக்கும் வெறி, போதைவெறி ஆகிய ஐந்து குணங்களும் பஞ்சமா பாதக குணங்கள் ஆகும். இத்தீய ஐந்து குணங்களையே நாகத்தின் ஐந்து தலைகள் குறிக்கின்றன. நாகத்தின் தலையில் பதுங்கியிருக்கும் நஞ்சைப் போன்று தீய குணத்திலும் நஞ்சு பதுங்கி இருக்கிறது என்பதன் குறியீடே இதுவாகும்.
மானுட வாழ்க்கைக்கும், உலகியலுக்கும் பங்கம் சேர்க்கும், நஞ்சுடைய நாகத்தைப் போன்ற இத்தீய குணங்களை, நன்நெறி எனும் தம்ம நெறிகொண்டு அடக்கி, கொல்லாமை, திருடாமை, காமவெறிக் கொள்ளாமை, பொய்யுரைக்காமை, போதையில் மூழ்காமை எனும் ஐந்து ஒழுக்கங்களை(பஞ்ச சீலங்களை)பின்பற்றி, சாந்தம் நிறைந்த, ஆனந்தமும் நிம்மதியுமான நிலையுடைய வாழ்க்கையை அடைவதையே ஐந்து தலை நாகத்தின் மீது வீற்றிருக்கும் புத்தர்-பாண்டுரங்கர்- நமக்கு உணர்த்துகிறார்.
Comments
Post a Comment