வெண்மணி கொடூரம்* *காலத்தால் ஆறாத குரூரம்!*

*வெண்மணி கொடூரம்*
*காலத்தால் ஆறாத குரூரம்!*
*- தொல்.திருமாவளவன்*
~~~~~
இன்று உலகமே இயேசு பெருமானின் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் நாம் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறோம்.
இதே நாளில் தான், 1968 ஆம் ஆண்டு, தஞ்சை- கீழ்வெண்மணியில் அந்தக் கொடூரம் அரங்கேற்றப் பட்டது. சாதிக் கொழுப்பும் பணத் திமிரும் மேலோங்கிய பண்ணையார்கள் என்னும் ஆதிக்க வெறிபிடித்த கும்பல், விவசாயக் கூலித் தொழிலாளர்களான ஏழை-எளிய சேரிவாழ் மக்கள் 44 பேரை உயிரோடு எரித்துக் கருக்கி, சாம்பலாக்கி எக்காளமிட்டது.
கூலி நெல்லை இன்னும் ஒருபடி கூடுதலாகக் கொடுக்க வேண்டுமெனக் கோரியது தான் குற்றமாம். பொதுவுடமை கட்சியினரின் துணையோடு, சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும், மிகக் குறைந்த கூலியில் மிக மோசமான முறையில் காலங்காலமாக உழைப்பைப் சுரண்டும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், உழைக்கும் மக்கள் அமைப்பாய் அணி திரண்டது தான் அவர்கள் செய்த பாவமாம்.
இதனால் ஆத்திரமடைந்த சாதிவெறி பண்ணையார்கள், 'நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்' என்னும் அமைப்பை உருவாக்கி வெறியாட்டம் போட்டனர். ஒருநாள், 'விவசாயத் தொழிலாளர் சங்கத்தைச்' சார்ந்த இருவரைப் பிடித்துக் கட்டிவைத்து அடித்து வதை செய்தனர். அதனைக் கேள்வி பட்டதும் அக்கிராமத்திற்குச் சென்று வதைக்குள்ளான அவர்களை விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மீட்டுவந்தனர்.
இந்த துணிச்சல் வாய்ந்த நடவடிக்கை பண்ணையார்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது; எனினும், அவர்களின் ஆணவத்தை மேலும் பன்மடங்காகப் பெருக்கி விட்டது. தமது ஆதிக்கத்தையும் ஆணவத்தையும் தக்கவைத்திட வேண்டுமென்பதுடன், அவற்றை வலுவாக நிலைநாட்ட வேண்டுமென்பதற்காகவே சாதிவெறிப் பிடித்த பண்ணையார்கள் இந்தக் கொடூரமான 'பெருந்திரள் படுகொலையை' நடத்தினர்.
பண்ணையார்களிடையே மேலோங்கிய அச்சத்திற்கும் ஆத்திரத்திற்கும் உழைக்கும் மக்களிடையே பரவிய கம்யூனிஸமும் ஒரு காரணமாக அமைந்தது எனலாம்.
காலம் காலமாக அடிமைப்பட்டு சிதறி கிடந்தவர்களை, கம்யூனிஸ இயக்கம் அரசியல் ரீதியாக அணிதிரட்டி அமைப்பாக்குவதாலும், ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் துணிவை ஊக்கப்படுத்துவதாலும் அவ்வியக்கத்தை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்கிற பண்ணை ஆதிக்க வெறியும் ,
கைகட்டி,வாய்பொத்தி, கூனிக் குறுகிக் கிடந்த கீழ்ச்சாதி அடிமைகளுக்கு நம்மை எதிர்க்குமளவுக்குத் துணிச்சலா? என்கிற சாதி ஆதிக்க வெறியும் தான், உழைக்கும்
மக்களை- குறிப்பாக தலித் மக்களை மட்டுமே
ஈவிரக்கமின்றி உயிரோடு எரித்து ஓலமிட்டது.
கையளவும் நிலமில்லாத கூலிகள், பெருநிலவுடைமையாளர்களான நம்மையே எதிர்ப்பதா என்கிற பண்ணை ஆதிக்கவெறியும், தீண்டப்படாத கீழ்ச்சாதிப் பிறவிகள், மேல்சாதியினரான நம் முன்னால் தலைநிமிர்வதா என்கிற சாதி ஆதிக்கவெறியும் தான் அந்தக் கொடூரப் படுகொலையை நிகழ்த்தியது.
வழக்கம்போல இந்தக் கேவலத்தை அரசமைப்பின் அனைத்துத் துறையினரும் ஆட்சியாளர்களும் வேடிக்கைப் பார்த்தனர் என்பதுடன், அந்த சமூகவிரோதக் கும்பலைப் பாதுகாப்பதில் தீவிரமாயிருந்தனர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை!
கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகள் யாவருமே நிரபராதிகள் என உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இது தலித்துகளுக்கு எதிரான மாபெரும் அரசவன்கொடுமை!
வழக்கம் போல அரசியல்கட்சிகள் வாய்மூடி, விழிமூடி, விலகிநின்று வேடிக்கை பார்த்தன!ஒருசில கட்சிகள் அந்தக் கொடுமையை ஞாயப்படுத்தின! இது ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான அரசியல் வெங்கொடுமை!
எனினும், 12 ஆண்டுகளுக்குப் பின்னர் நக்சல்பாரிகள் என்னும் மக்கள் படை கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு மரணத் தண்டனை விதித்து நிறைவேற்றியது.
வெண்மணி கொடூரம் காலத்தால் ஆறாத குரூரம்!
சாதிய- நிலவுடைமை ஆதிக்கத்தை வேரறுக்கும் போரில் களப்பலியான வெண்மணி போராளிகளுக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்!
ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்து, தொடர்ந்து போரிட இந்த நாளில் உறுதியேற்போம்!
இவண்
தொல்.திருமாவளவன்.

Comments