நம் காலத்தின் ஆகப் பெரிய துயரங்களில் ஒன்று ஈழப்படுகொலைகள்.
சிங்கள அரசின் ராணுவமும், ஈழ அரசின் ராணுவமும் மோதிக் கொண்டதில் சிங்கள ராணுவம் வெற்றி பெற்றது என்று எளிமையாக வரலாற்றை எழுதி விட முடியாது.
காரணம்,சர்வதேச யுத்த விதிகளை மீறி
பொதுமக்கள்,பெண்கள், குழந்தைகள்,ஆயுதங்களை இழந்து சரணடைந்தோர் யாவரையும் பாரபட்சமின்றி ராணுவ ஆயுதங்கள் துளைத்தெடுத்த கோரம் நம் நினைவில் தங்கியுள்ளன.
அவற்றை, வீடியோக்களாகவும் படங்களாகவும் பார்த்த போதெல்லாம் பதறாதவர்கள் இருக்க முடியாது.
ஆனால்...
ஒரு போருக்குப் பின்னால் நாம் கற்றுக் கொண்ட பாடங்களும், மீட்டெடுக்கப் படவேண்டிய மனித நேயமுமே கவனிக்கப் பட வேண்டியனவாக இருக்கின்றன.
அரசின் ஆயுத அமைப்புகள் யாவும்
மக்கள் விரோத பயங்கரவாத நடவடிக்கைகளில் இறங்கும் வாய்ப்புகளைக் கொண்டவை என்பதை பல முறை நிறுவி விட்டன.
எனவே, எல்லையில் ராணுவ வீரர்கள் என உருகி,பதிவு எழுதாதீர்கள்.
காவல்துறை ஹீரோப் படங்களுக்கு கைதட்டாதீர்கள்.
மக்கள் போராட்டங்களை இடைஞ்சலாகப் பார்க்கும் மேல்தட்டு மனோபாவத்தை ஒழியுங்கள்.
பிரச்சினை எவையாயினும் அதன் முழுப் பரிமாணத்தையும் அறிய முயற்சியுங்கள்.ஈழத்தைப் பொறுத்தவரை சர்வதேச சக்திகள்,ஆயுத வியாபாரிகள்,இலங்கை புவிசார் அரசியல் ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள்.
வெறுமனே ராஜபக்சேவை பார்த்து தமிழக எம்பிக்கள் சிரித்தார்கள்,ஷேக் ஹேண்ட் கொடுத்தார்கள் என்பது போன்ற 'தரையடிக் கோபம்' உதவாது.
ஈழத்தையும் விற்பனைப் பொருளாக்கி, உணர்ச்சிபூர்வமாகச் சுரண்டும் அரசியலைச் செய்ய முடியும் என்பதை அறியுங்கள்.
யாவற்றுக்கும் மேல்,
மத/ஜாதி அடிப்படைவாதத்திற்கு எதிராக யோசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
இந்தியா முழுவதும் பல நூற்றாண்டுகளாக ஜாதி ஆதிக்க வெறியால் சிதைக்கப் பட்டவர்கள் ஈழப் பலிகளைப் போல ஆயிரம் மடங்கு என்பதை அறியுங்கள்.
மற்றபடி, ஈழப்போர் வேதனைகளைக் கண்ட பிறகும், சக மனிதனுக்கு இழைக்கப் படும் அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழ ஜாதி/மதம்/மொழி என யோசிப்பீர்கள் எனில்,
மெழுகுவர்த்தி மௌனங்கள் பயனற்றவை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
*ஜீவகன் முகநூல் பதிவு*
Comments
Post a Comment