மனுதர்ம எரிப்பில் உன்னுடைய சூத்திர வர்ணமும் தானே எரிந்து போனது.?

காலை எழுந்த உடன் கல்லூரி செல்ல சட்டென்று கிளம்புகிறான் அந்த இளைஞன். தங்குமிடத்தில் இருந்து வெளியே தெருவழியே  அவசர அவசரமாக நடந்து செல்கிறான் வழக்கம் போல அச்சத்துடனும் கூனிக் குறுகியும்...!
வழியில் தீடீர் பரவசத்தை உணர்கிறான்...மூச்சுக்காற்றை சுதந்திரமாக இழுத்துவிடுகிறான், கூனிக்குறுகிய அவனது உடல் மொழியிலிருந்து விடுபட்டு, அவனது கட்டுண்ட கைகளை விடுவித்து வீசி நடக்கிறான், வீதியில் அங்கும் இங்கும் உலாவிச் செல்கிறான் முதன்முதலாக...!
அந்த தெருக்கள் அம்பாவாடே கிராமத்தின் தெருவோ, பம்பாய் நகர தெருக்களோ, மஹராட்டிர தெருக்களோ இல்லை..!
ஆம் அது நியூயார்க் நகர வீதி..! புது உலகை கண்ட உணர்வில் லயிக்கிறான் அந்த இளைஞன்...
இங்கு யாரும் என் மீது எச்சில் உமிழ வில்லை, என் நிழல் தீட்டு என்று சொல்லவில்லை, எனை தொட்டால் தீட்டு என்று விலகிச் செல்லவில்லை, எங்கு வேண்டுமானாலும் முடிவெட்டிக் கொள்ளலாம், முழங்காலுக்கு கீழும், இடுப்புக்கு மேலும் உடை உடுத்தக்கூடாது என எந்த தடையும் இல்லை , விரும்பிய எந்த உடை வேண்டுமானாலும் உடுத்தலாம், எங்கு வேண்டுமானாலும் தேநீர், உணவு அருந்தலாம், எங்கு வேண்டுமானாலும் தங்கலாம், எந்த வாகனத்திலும் செல்லலாம், இங்கு யாரும் என்னை வகுப்பறையில் தனி இடத்தில் 'உட்கார் மஹர் நாயே' என இழிவு செய்ய வில்லை ..
நம்ப முடியாத உணர்வில் உற்சாகத்தோடு கல்வி பயின்றான்..! நியூயார்க் மட்டுமல்ல இலண்டன் நகரத்திலும்...
அந்த சுதந்திர உணர்வை தான் பெற்றுவிட்டேன், இங்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது .. கல்வி முடித்தவுடன் நல்ல வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதித்து குடும்பத்தோடு அங்கேயே குடியேற வேண்டும் என்று அந்த இளைஞன் எண்ணவில்லை..!
தான் வெளி நாட்டில் தங்கி பயிலும் போது ஏற்பட்ட குடும்ப வறுமையையும், வலிகளையும், மரத்துப் போகச் செய்து, உணவுக்கு சிரமம் படும்போது தனது பழைய புத்தகங்களை விற்று அந்த காசில் சில வேளைகள் உணவு உட்கொண்ட போதிலும் , அவர் தனது வேட்கையை விடவில்லை..!
இந்தியா எனும் நரகத்திற்கு மீண்டும் செல்ல வேண்டுமா எனத் தயங்க வில்லை..எல்லாப் பட்டங்களையும் முடித்து உலக மேதையாக இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கிறார்..!
இனியும் தன்மீதான இந்துமத கோர சாதிய தீண்டாமைகள் தாக்குதல்கள் தொடரும் என தெரிந்தே...பம்பாய் தெருக்களில் செல்கிறார்..சற்று துணிச்சல்காரராக அதே கோட் சூட்டோடு...!
நாய்,பன்றிக்கு கொடுக்கும் மரியாதையைக் கூட அவருக்கு கொடுக்காத தாய்நாட்டுக்கு துரோகம் செய்துவிடவில்லை...மாறாக
அவரின் தாய் நாட்டிற்கு பதிலீடாக என்ன செய்தார் தெரியுமா. ?
இன்றைக்கு அவரின் சிலையை சேதப்படுத்துபவனுக்கே அடிப்படை உரிமையை பெற்றுக்கொடுத்தார்..!
தன் சிலை மீது மை பூசுபவனுக்கு கல்வியிலும் , வேலை வாய்பிலும் இட ஒடுக்கீட்டுக்கு வழி வகை செய்து கொடுத்தார்..!
மணமாலை விளம்பரங்களில் sorry for SC/ST என்று போடுகிறீர்களே அந்த பெண்களுக்கே சொத்துரிமை கொடுத்தார்..பேறுகால விடுப்பை கொடுத்தார்..பலதார மணங்களை தடைசெய்தார்..அந்த பெண்களுக்கே பாதுகாப்பை வழங்கினார்..!
எட்டுமணி நேர வேலை , பென்சன், போனஸ் ,  தொழிளார் உரிமை, நலன் என நீங்கள் அனுபவிக்கும்  அத்தனையையும் நீங்கள் காரி உமிழ்ததற்கு பரிசாக உங்களுக்கு கொடுத்தார்...!
சாதிச்சங்கம் வைத்து ஒடுக்கப்பட்டவர்களை கருவருப்போம் என தீர்மானம் போடும் தைரியத்தையும் , உரிமையையும் உங்களுக்கு வழங்கியவர் அவரே...!
மனுதர்ம எரிப்பில் உன்னுடைய சூத்திர வர்ணமும் தானே எரிந்து போனது.?
இந்துமத ஒழிப்பில் உன்னுடைய சமத்துவமும் தானே அடங்கியிருக்கிறது. ?
அவர் முன்னெடுத்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் உனக்கும் தானே?
இன்றைக்கு நீங்கள் ஒரு வார்டு கவுன்சிலர்  ஆனால் ஸ்கார்பியோ காரில் பறக்கிறீர்களே..? இந்தியாவின் சட்ட அமைச்சராக இருந்து எந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் பறந்தார்.?
தன்னை படிக்க வைத்த பரோடா மன்னருக்கு நன்றியோடு இருந்தார்...!
காந்தியாரோடு கருத்து முரண்பட்ட போதும் சதித் திட்டம் தீட்டவில்லை..!  ஒடுக்கப்பட்ட மக்கள் தாக்கப்படும் போது கூட எந்த  ஆதிக்க சாதிகளுக்கு எதிராகவும் வன்முறையை தூண்ட வில்லை..!
ஏனெனில் அவர் அனைவரையுமே நேசித்தார்..!
எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைக்கு நீங்கள் அடைந்திருக்கும் அரசியல் பதவிகள், சொத்து சுகம்  எல்லாவற்றையும் அரசமைப்பு மூலம் உங்களுக்கு   கொடுத்தவர் அவரே...! நீங்கள்  குவித்து வைத்திருக்கும் கோடிகள் அதையும் தனது ரிசர்வ் வங்கி கொள்கை மூலம் வழங்கியவர் அவரே..!
இல்லையேல் மனுசாதிச்சட்டப்படி   நீங்களும் இந்த நாட்டில் வேசிமக்களாகத்தானே வாழ முடியும்.?
இன்னும் ஓராயிரம் முறை நீ அவரை இழிவு செய்தாலும் , அவரே உனது இருள் விலக்குவார்...வழிகாட்டியாக வருவார் என்பதை காலம் உணர்த்தும் காத்திரு..!
நீ அவமதித்தாலோ, மை ஊற்றினாலோ சேதமாகிட விட அவர் என்ன செங்கற்சுவரா ?
அவர்....
மனங்களை சூழ்ந்திருக்கும் அன்புக்கடல்....!
எண்ணங்களில் வீற்றிருக்கும் விடுதலை நெருப்பு...!
எவரும் மறைக்கமுடியா அறிவுச்சூரியன் ...!
"பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்"

Comments